கோடை காலத்தை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் சார்பில் நடமாடும் ஐஸ்கிரீம்
வண்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோடை காலத்தை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் சார்பில் ஐஸ்கிரீம் விற்பனையை
பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் இல்லம் தேடி ஆவின் திட்டத்தை இளைஞர் நலன்
மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும்
பால்வளத்துறை அமைச்சர் நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
முதற்கட்டமாக 32 பேட்டரி வண்டிகள் மூலம் சென்னை மாநகரம் முழுவதும் கோடை காலத்தை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம், தயிர், மோர், லசி போன்ற பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் வைசியா வங்கியின் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி வண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
பெண்களுக்கு சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் பேட்டரி வண்டிகள் வழங்கப்பட்டன. ஒரு பேட்டரி வாகனம் மற்றும் ஒரு குளிர்சாதன பெட்டிக்கு ரூ.1.21 லட்சம் மொத்த விலையாகும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, வழிபாட்டுத்தலங்கள்,திருவிழாக்கள் பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் ஆவின் ஐஸ்கிரீம் இனி விற்பனையாகும்.
ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் இந்த ஐஸ்கிரீம் வண்டியில் ஐஸ்கிரீம் சாக்கோ பார்,கசாடா, கேண்டி, பிரீமியம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட 100 வகையான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.







