லாரி டயரில் கஞ்சா கடத்திய 4 பேருக்கு போதை பொருள் தடுப்பு வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடந்த 2017 ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து வந்த லாரியை நாசரத்பேட்டை அருகே உள்ள சுங்க சாவடியில் காவல்துறை சோதனை செய்தது. அதில் லாரி டயரில் சுமார் 150 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் லாரியில் வந்த செல்வகுமார், மணி,ராஜா, ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு போதை பொருள் தடுப்பு வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தபோது, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து குற்றவாளிகளான ரமேஷ் மற்றும் ராஜா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவை உறுதி செய்த நீதிபதி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.







