கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடலில் அதிகாலையில் சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஒன்று தான் இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி கடற்கரை . அழகும் கம்பீரமும் சங்கமிக்கும் இடமான இங்கே இயற்கை அதிசயங்களும் மனிதனால் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்புகளும், மனதைக் கவரும் காட்சியை வழங்கும் சுற்றுலா தளங்களும் உள்ளன. இவற்றை பார்ப்பதற்கு அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கும்.
அப்பேற்பட்ட சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் தினமும் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சியை காண ஏராளமானோர் வருகை புரிவர். அதிலும் வார விடுமுறை தினங்களில் வழக்கமான சுற்றுலா பயணிகளை விட உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும்.
அந்த வகையில், ஞாயிறு மற்றும் கோடை விடுமுறையொட்டி, மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு இன்று படையெடுத்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித் துறை கடற்கரையில் சூரிய உதயத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும், முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பகுதியிலும், மக்கள் கூட்டம் அலைமோதியது.
- பி.ஜேம்ஸ் லிசா








