சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ ரூ.4-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் தக்காளி பழங்கள் செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு, விற்பனைக்காக ஈரோடு, கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை காரணமாக தக்காளி செடியில் அழுகல் ஏற்பட்டு விளைச்சல் பாதித்து தக்காளி விலை கிலோ 80 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது.
இந்த நிலையில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ தக்காளி இரண்டு ரூபாயில் இருந்து நான்கு ரூபாய் மட்டுமே கொடுத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அதிக விளைச்சல் காரணமாக தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் தாளவாடி பகுதியில் இருந்து தக்காளி பழங்களை டெம்போவில் ஏற்றி விற்பனைக்காக காய்கறி மார்க்கெட்டுக்களுக்கு கொண்டு செல்லும் விவசாயிகள், தக்காளி விலை வீழ்ச்சி காரணமாக தக்காளி கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன் வராததால் விரக்தி அடையும் விவசாயிகள் தக்காளி பழங்களைச் சாலையோரங்களில் கீழே கொட்டி விட்டு செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
—சௌம்யா.மோ






