விஏஓ கொலை வழக்கு : புதிய விசாரணை அதிகாரி நியமனம்

விஏஓ கொலை வழக்கு தொடர்பாக புதிய விசாரணை அதிகாரியை நியமித்து தென் மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் வல்லநாடு அருகே…

விஏஓ கொலை வழக்கு தொடர்பாக புதிய விசாரணை அதிகாரியை நியமித்து தென் மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிபுரியும், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த 25ம் தேதி திடீரென புகுந்த இரண்டு மர்ம நபர்கள், லூர்து பிரான்சிஸை அரிவாளால் கை, தலை, கழுத்து என உடலின் பல பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள்  சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த  லூர்து பிரான்சிஸை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மணல் கடத்தலைத் தடுத்த
காரணத்திற்காகக் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை, ராமசுப்பிரமணியம், மாரி என்ற இருவர் படுகொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து படுகொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும், விஏஓ-வின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

இதையடுத்து லூர்து பிரான்சிஸை வெட்டிவிட்டு தப்பியோடிய ராமசுப்பிரமணியம் என்பவரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இரண்டாவது குற்றவாளியான மாரியை  திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க்  இந்த கொலை வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ஊரக உட்கோட்ட டிஎஸ்பி சுரேஷ்ஷை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.