மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை சந்தித்தார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டெல்லியில் உள்ள நிர்மான் பவனில் சந்தித்துப் பேசினார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார். சந்திப்பின் போது தமிழ்நாட்டுக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசிகள், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம், தினசரி 2 லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசி போடும் அளவுக்கு தற்போது வந்துள்ளது. செப்டம்பர் மாதத்துக்கு 1.04 கோடி தடுப்பூசியை மத்திய அரசு வழங்கவுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது தடுப்பூசி வீணாகும் நிலை இல்லை என்று தெரிவித்தார்.
25 புதிய ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதனை உரிய குழுவுடன் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து உரிய வகையில் வலியுறுத்தப்படும் என்றார்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும், 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம் என்றும் கூறினார். அரியலூர் – பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று முன்பே இருந்திருக்க வேண்டும். அது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் யாரும் அச்சமடையத் தேவை இல்லை என்றும் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.