கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. கோடநாடு வழக்கில் தனது பெயரை சேர்க்க சதி நடப்பதாகவும், அதற்காக மீண்டும் விசாரணை நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சட்டமன்றத்தை புறக்கணித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கலைவாணர் அரங்கம் முன்பு போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் கோடநாடு கொளை மற்றும் கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் விசாரணைக்கு நேற்று ஆஜராகாத நிலையில் அரசு வழக்கறிஞர்கள் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணைக்காக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் வழக்கறிஞர்களுடன் உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் நீலகிரி மாவட்ட எஸ்.பி ஆசிஸ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 2 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.








