மாநிலங்களவை உறுப்பினராக திமுகவின் எம்.எம்.அப்துல்லா தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் காலமானார். காலியாக உள்ள அவரது பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திமுகவின் சார்பில் எம்.எம்.அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக உள்பட மற்ற அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. பெரும்பான்மை பலம் இருப்பதால் திமுக வெற்றிபெறுவது உறுதியானது. நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அப்துல்லாவின் வேட்புமனு செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்டது.
சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்த அக்னி ஸ்ரீராமசந்திரன், பத்மராஜன், கோ. மதிவாணன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டமன்ற செயலாளருமான கி.சீனிவாசன் அறிவித்தார்.
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதனால் மாநிலங்களவை உறுப்பினராக எம்.எம்.அப்துல்லா தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார் அப்துல்லா.








