அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக சூரப்பா 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார். பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்தது. இதனிடையே சூரப்பாவிற்கு எதிராக தமிழக அரசுக்கு வந்த முறைகேடு புகார்களை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் சூரப்பாவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிந்தது. எனினும், அவருடைய பதவிக்காலத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நீட்டிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுபோன்ற எந்த உத்தரவும் தனக்கு வரவில்லை என துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார். இன்று காலை ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்தார் சூரப்பா.
இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் பதிவாளர் கருணாமூர்த்தி, பேராசிரியர் ரஞ்சனி பார்த்தசாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படும் வரை பல்கலைக் கழகத்தை வழிகாட்டுதல் குழு நிர்வகிக்கும்.







