தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து கொலைவழக்கின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்வம் தொடர்பாக விசாரித்து வந்த அருணா ஜெகதீசன் ஆணையம், சம்பவத்தன்று துப்பாக்கி சூடு நடத்துவதற்கு அவசியமே இல்லை என்றும் அப்போதைய காவல்துறை மீது தவறுள்ளதாகவும் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் 14 உயிர்களைப் பறித்த அரசப்பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் இறுதி அறிக்கையானது நம்பிக்கையையும், ஆறுதலையும் தருகிறது என தெரிவித்துள்ளார்.
ஒருநபர் ஆணையத்தின் விசாரணைக்காக நானும் நேர்நின்று, இதில் ஆளும் வர்க்கம் நிகழ்த்திய அநீதிகளையும், அநியாயங்களையும் எடுத்துரைத்த நிலையில், இன்றைக்கு தூத்துக்குடி மக்கள் பக்கமிருக்கும் நியாயத்தை நிலைநாட்டும் விதமாக வெளிவந்திருக்கும் ஆணையத்தின் அறிக்கையை உளப்பூர்வமாக வரவேற்கிறேன். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அறப்போராட்டத்தின் நூறாவது நாளில், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாய் வந்தபோது, அவர்களை நோக்கித் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தி, அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட்டது அன்றைய அதிமுக அரசு.
14 உயிர்களைப் பலிகொண்ட படுகொலைகளுக்கு முழுமுதற்பொறுப்பேற்க வேண்டிய காவல்துறை அமைச்சகத்தைத் தன்னகத்தே வைத்திருந்த அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ எனக்கூறிய பொருந்தா வாதத்தை ஏற்பதாக வைத்துக்கொண்டாலும், போராட்ட நாளுக்கு அடுத்த நாளும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதே அது எப்படி? அதனையும் தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டாரா? வட்டாட்சியர்கள்தான் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்தார்கள் என்பதை அவரும் வழிமொழிகிறாரா? காவல்துறை அமைச்சகத்தைக் கொண்டிருக்கிற மாநிலத்தின் முதல்வருக்கே தெரியாது காவல்துறையினருக்குத் துப்பாக்கிச்சூடு அனுமதியளிக்கிற அளவுக்கு அதிகாரமிக்கதா வட்டாட்சியர் பதவி? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதியரசர் அருணாஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் அறிக்கையில், குருவிகளைப் போல, மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறையினர் ஒளிந்துகொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர் எனக்கூறி, 17 காவல்துறையினர் பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி சுடலைக்கண்ணு மட்டும் 17 சுற்றுகள் சுட்டுள்ளார் எனவும் 4 இடங்களில் அவரைச் சுட வைத்ததன் மூலம், அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது எனவும், காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்விதான் தூத்துக்குடி படுகொலை எனவும் ஆணையத்தின் அறிக்கை கூறியுள்ளது.
ஆட்சி மாறியும், காட்சிகள் மாறாத அவல நிலையாய், அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய படுகொலைகளுக்கு திமுக ஆட்சியிலும் இதுவரை நீதி கிடைத்தப்பாடில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக நிரந்தரச் சட்டமியற்றவும் மாநில அரசுக்கு மனமில்லை. அதேபோல, கொடநாட்டில் அடுத்தடுத்து 5 கொலைகள் நடந்தபோதும் இதுவரை அக்கொலை வழக்குகளில் எவ்வித முன்னேற்றமோ, முன்நகர்வோ இல்லை. அக்கொலைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. இத்தோடு, மர்மமான முறையில் இறந்துபோன தங்கை ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதிகேட்டு அதிமுக போராடவுமில்லை. திமுக நீதியின் பக்கம் நிற்கவுமில்லை. அதிமுக அரசின் குற்றங்களை திமுக அரசு கண்டும் காணாதது போலக் கடந்துசெல்வதும், திமுகவின் குற்றங்களை அதிமுக பேச மறுப்பதுமான நிகழ்வுகள் இரு கட்சிகளுக்கிடையேயும் மறைமுக ஒப்பந்தமிடப்பட்டு, திரைமறைவு பேரம் நடக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.
எனவே, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என கண்டறிந்து அவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து அனைவரையும் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த முன்வர வேண்டுமெனவும், துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானோர் குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்வதாக சீமான் தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்








