“இது அவசரநிலை, எதிர்வாத சக்திகளுக்கு இந்த தேர்தல் கைகூடி விடக்கூடாது” – விமர்சனங்களுக்கு மநீம விளக்கம்!

“இது அவசரநிலை, எதிர்வாத சக்திகளுக்கு இந்த தேர்தல் கைகூடி விடக்கூடாது” என  விமர்சனங்கள் எழுந்த நிலையில் மநீம விளக்கம் அளித்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சியான மநீம இடம்பெறும் என்று…

“இது அவசரநிலை, எதிர்வாத சக்திகளுக்கு இந்த தேர்தல் கைகூடி விடக்கூடாது” என  விமர்சனங்கள் எழுந்த நிலையில் மநீம விளக்கம் அளித்துள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சியான மநீம இடம்பெறும் என்று கூறப்பட்ட நிலையில் முதல் இரண்டுகட்ட பேச்சுவார்த்தையில் ஒரு தொகுதி மட்டும் கமலஹாசன் கட்சிக்கு கொடுக்கப்படும் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து,  காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் உள்ஒதுக்கீட்டில் ஒரு தொகுதியைப் பெற்று அதில் போட்டியிடலாம் என்று கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் காங்கிரஸ் கட்சியும் கை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  தனித்து போட்டியிடுவதாக இருந்தால் கோவை அல்லது பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக திமுக தலைமை அலுவலகத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும்,  நடிகருமான கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடந்த சனிக்கிழமை சந்தித்தார்.  அப்போது,  மநீம-வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க  இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்  ‘இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை.  நாங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.  இது பதவிக்கான விஷயம் அல்ல.  நாட்டுக்கான விஷயம்.  நான் எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்திருக்கிறேன்.  மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

திமுக- மநீம இடையேயான தொகுதி பங்கீட்டில் ஒரு தொகுதி கூட ஒதுக்காமல் மாநிலங்களவை பதவி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் இது குறித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

https://x.com/maiamofficial/status/1766768680182919356?s=20

” நாங்கள் எடுத்திருக்க கூடிய நிலை என்பது அவசரநிலை; இது தமிழ்நாட்டுக்கும், தேசத்திற்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு இது கைகூடி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்திருக்கும் முடிவு” என அந்த காணொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.