தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் துரித நடவடிக்கையால், திருவாரூர் மாவட்டத்தில், பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், வேளாண் பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் பாசனத்திற்காக, கடந்த ஜூன் 12-ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையை திறந்து வைத்தார். மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், கடைமடை விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக, காவிரி டெல்டா மாவட்டங்களில், 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் ஆறுகளை தூர்வாரியது தமிழ்நாடு அரசு. திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், குறுவை சாகுபடி செய்ய வேளாண்துறை இலக்கு நிர்ணயித்தது. எனினும், வாய்க்கால்களுக்கு போதிய நீர் மேட்டூர் அணையிலிருந்து வந்து சேரவில்லை என திருவாரூர் விவசாயிகள் வெளிப்படுத்திய வேதனையை, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து தனது கவனத்திற்கு வந்ததும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திருவாரூர் மாவட்ட கடைமடை விவசாயிகள் பயன்பெறும் வகையில், உடனடியாக கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து தண்ணீர் செல்லாத பகுதிகளான கூடூர், மாங்குடி, கடுவங்குடி, தென்னவராயநல்லூர், திருநெய்பேர் உள்ளிட்ட பாசனப் பகுதிகளுக்கு, தற்போது கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது திருவாரூர் மாவட்ட விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டம் மீது, எப்போதும் தனி பாசம் கொண்டவர் துரைமுருகன். செய்தி வெளியான அடுத்த சில மணி நேரங்களில், அவர் நடவடிக்கை எடுத்திருப்பது, டெல்டா பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, வேளாண் பணிகளை கடைமடை விவசாயிகளும் முழுவீச்சில் செய்து வருகின்றனர். செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழுக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த அமைச்சர் துரைமுருகனுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் உத்தரவின்பேரில், திருவாரூர் மாவட்டத்திற்கு தற்போது கூடுதல் தண்ணீர் பெற்று, பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு உடனடியாக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.