டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கத்தை விட 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக சுட்டெரித்ததால், மக்கள் அவதியடைந்தனர். வெப்பம் காரணமாக மின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
டெல்லியில் கோடை காலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று டெல்லியில் 43.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. டெல்லி அருகில் உள்ள குர்கானில் 44.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தலைநகர் டெல்லியிலும், குர்கானிலும் வழக்கத்தை விட 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவானதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது இந்த ஆண்டின் அதிக பட்ச வெப்ப நிலையாகும். இந்த வெப்பத்தை அதி தீவிர வெப்பம் என்று வானிலை மையம் வகைப்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் காரணமாக இன்று டெல்லியில் அனல் காற்று வீசியதால் மக்கள் வீடுகளிலேயேமுடங்கினர். மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்தே பணியாற்றும் சூழல் அதிகரித்துள்ளதாலும் மின்சாரப்பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 6,921 மெகாவாட் யூனிட் மின்சாரத்தை இன்று டெல்லி மக்கள் உபயோகித்துள்ளனர். இந்த கோடைகாலத்தில் குறிப்பாக ஜூன் மாதத்தில் கடந்த 23,24,28,29 ஆகிய தேதிகளிலும் இன்றும் அதிகமாக மின்சாரம் உபயோகிக்கப்பட்டுள்ளதாக டெல்லி மின் விநியோக அதிகாரிகள் கூறினர்.
அதிகமாக மக்கள் மின்சாரத்தை உபயோகித்தபோதிலும் கூட மூன்று மின்சார விநியோக நிறுவனங்களும் மின் தேவையை உரிய முறையில் பூர்த்தி செய்ததாக கூறியுள்ளன. வரும் காலங்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கும்பட்சத்தில் டெல்லியின் மின்சாரத் தேவையானது 7000 முதல் 7400 மெகாவாட் ஆக அதிகரிக்கும் என்று தெரிகிறது.