கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் இவ்விழா நடைபெறும், அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா அம்மனுக்கு காப்பு கட்டி குடியிருத்தலுடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி, கோயில் தந்திரி கோயிலில் இருந்து தீபத்தை ஏற்றி மேல்சாந்தியிடம் கொடுத்தார். அவர் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் அதைக்கொண்டு தீ மூட்டினார்.
இதையும் படிக்க: கோயில் தேர்த்திருவிழவில் கோஷ்டி மோதல்-கல்லூரி மாணவன் உயிரிழப்பு
அதைத்தொடர்ந்து, கோயில் மணி ஒலிக்கப்பட்டு, ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. சுற்றுப் பகுதியில் இருந்த பெண்களும் தங்கள் அடுப்பில் தீயை மூட்டினர். பிற்பகலில் பொங்கல் நிவேத்யம் நடைபெறும். நூற்றுக்கணக்கான புரோகிதர்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்படும்.
விழாவையொட்டி, திருவனந்தபுரம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு பெண்களும் பொங்கல் வைத்து ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு படைக்கும் இந்த விழா உலக அளவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
-ம.பவித்ரா








