திருக்குறளை மதநெறியாளர்களுக்குக மட்டும் உரியதாகச் சுருக்கப் பார்க்கிறார் ஆளுநர்- முரசொலி

திருவள்ளுவரை மீண்டும் புனைவுகளுக்குள் அடைக்கக் கூடாது என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஆரியம், ஆத்திகம், சனாதனம், வேதங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி, ‘என்ன…

திருவள்ளுவரை மீண்டும் புனைவுகளுக்குள் அடைக்கக் கூடாது என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஆரியம், ஆத்திகம், சனாதனம், வேதங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி, ‘என்ன மாதிரியான விளக்கங்களை இன்று அளித்துள்ளார்’ என்ற பேராவல் தினந்தோறும் ஏற்படுகிறது. அவர் ஆளுநர் என்ற பொறுப்பான பொறுப்பில் இருந்து பேசுவதால்தான் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் கவலையேபட வேண்டியதில்லை. திருக்குறளைக் கையில் எடுத்திருக்கிறார் ஆளுநர். அவரது பேச்சில் மாற்று மதத்தினர் மீதான அவரது வெறுப்புதான் வெளிப்படுகிறதே தவிர, திருக்குறள் வெளிப்படவில்லை. “தமிழறிஞர்களின் மொழிபெயர்ப்பால்தான் திருக்குறளில் உள்ள ஆன்மிகம் வெளிப்பட்டது” என்ற அரிய கருத்தை அவர் சொல்லி இருக்கிறார்.

“திருக்குறளை நெறிமுறைகள், நன்னெறிகள் புத்தகமாக குறைத்து விட்டார்கள்” என்றும் கவலைப்பட்டுள்ளார் ஆளுநர். திருக்குறளில் இருக்கிற ஆன்மிகத்தைச் சிதைத்துவிட்டார்கள் என்றும் பொங்கி இருக்கிறார். 2050 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட திருக்குறள் இன்று, உலகின் 200க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகப் பொதுமறையாக உயர்ந்து நிற்கிறது. அதனை உள்ளூர்ப் புத்தகமாக, ஒரு மதநெறியாளர்க்கு மட்டும் உரியதாகச் சுருக்கப் பார்க்கும் தந்திரம்தான் அவர் உரையின் மூலமாக வெளிப்படுகிறது. உலகின் எந்த நூலும் அடைய முடியாத உயரத்தில் இருக்கிறது திருக்குறள். அதை ஞானத்தின் ஊற்று, நித்திய ஆன்மிகம், ஞானத்தின் காவியம், தர்மத்தின் கண், ஆதிபகவன், பக்தி, ரிக்வேதம், உலகத்தைப் படைத்தவன் ஆதிபகவன் என்று சொல்வதன் மூலமாக, ஒரு கூட்டுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள். இவை அனைத்தும் புதிதல்ல. இப்படி அடைக்கப்பட்டுக் கிடந்த திருக்குறளை விடுவித்தவர்கள்தான் தமிழ்நாட்டுத் தமிழறிஞர் பெருமக்கள்.

தமிழறிஞர்களுக்கெல்லாம் பெரும் அறிஞராகப் போற்றப்படுபவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார். அவர், பழுத்த ஆத்திகர். அவரது பெரும்பாலான புகைப்படங்களில் நெற்றி நிறைய நீறு பூசியவாறுதான் இருப்பார். பழுத்த சைவர். ‘சைவன்’ என்று சொல்லிக் கொண்டவர். “கடவுள் வாழ்த்து” அதிகாரமே இடைச்செருகல் என்று சொன்னவர் வ.உ.சி. திருக்குறள் மணக்குடவர் உரையைப் பதிப்பித்தவர் வ.உ.சி. அதில், “திருக்குறளில் நான்காவது அதிகாரமாக இருக்கிறது ‘அறன் வலியுறுத்தல்’. முதல் மூன்று அதிகாரங்கள் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை ஆகும். இந்த மூன்று அதிகாரங்களும் வள்ளுவர் எழுதியது அல்ல, உரையாசிரியர்கள் சிலர் எழுதிச் சேர்த்தது” என்பது வ.உ.சி.யின் கருத்து.

சிறப்புப் பாயிரமாக, உரையாசிரியர்கள் சிலர் எழுதியதை வள்ளுவர் எழுதியதாக பிற்காலத்தில் சேர்த்து விட்டார்கள் என்றும், மொத்தமே 130 அதிகாரங்கள்தான் திருவள்ளுவர் எழுதியதே தவிர 133 அதிகாரங்கள் அல்ல என்றும் வ.உ.சி. சொல்கிறார். ‘திருக்குறள் என்பது சமயத்திற்காகத் தோன்றிய நூலன்று’ என்று சொன்னவர் குன்றக்குடி அடிகளார். ‘திருக்குறளைப் பிற்காலத்தவர்கள் வடமொழி நான்மறையோடு ஒத்தது என்பர். இல்லை, இல்லவே இல்லை” என்றவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். எனவே, வேதநெறியையும் குறள் நெறியையும் ஒப்பிடுவதே தவறு. அணைத்து அழிக்கும் தந்திரம் ஆகும் இது.

தமிழ்நாட்டின் முதல் புரட்சியாளர் என்று பேராசிரியர் இலக்குவனார் அவர்களால் போற்றப்பட்ட திருவள்ளுவரை. மீண்டும் புனைவுகளுக்குள் அடைக்கக் கூடாது. ஜி.யு. போப்பின் நோக்கம் என்ன என்பது இருக்கட்டும். இன்றைய ஆளுநரின் நோக்கம் என்ன? என முரசொலி நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.