எங்களைப் பார்த்தால் பயம் என்பதால், இது போன்ற சம்பவங்களை நடத்துகிறார்கள் என ஈரோடு தேர்தல் வாக்கு சேகரிப்பில் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினர்க்கும் ஏற்பட்ட கைகலப்பு குறித்து சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற
உள்ளது .தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அதற்கான பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இபிஎஸ் ஆதரவாளரான கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இவர்களைத் தொடர்ந்து தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து அந்தந்த கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், ஈரோடு கிழக்கு தொகுதியில் முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர். இதனால், தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாகக் காட்சியளிக்கிறது. தினமும் பல்வேறு கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,ஈரோடு கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் வீரப்பன்சத்திரத்திலிருந்து ஊர்வலமாகச் சென்றார்.
அப்போது காவிரி சாலையில் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சி நிற்கும் சீமான் முன்னிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் கற்களையும் கட்டைகளையும் வைத்துத் தாக்கிக் கொண்டதால், பலர் பயனடைந்தனர். அத்துடன் காவல்துறை மீது காலணி வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஈரோட்டில் திமுகவினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து சீமான் நியூஸ் 7 தமிழுக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், மாடியிலிருந்து திமுகவினர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். தேவையில்லாத நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள். எங்களைப் பார்த்தால் பயம் என்பதாலும் , இளைஞர்கள் ஆதரவு எங்களுக்கு இருப்பதாலும் இது போன்ற சம்பவங்களை நடத்துகிறார்கள். எல்லாம் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிந்து தான் நடக்கிறது. ஸ்டாலின் ஈரோட்டில் பிரச்சாரம் செய்யும் போது நான் இருக்கக் கூடாது என்பதற்காக இது போன்ற தாக்குதல் சம்பவம் நடைபெறுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனநாயகம் ,கருத்துச் சுதந்திரம் என்பதே இங்கு இல்லை.இவ்வளவு அராஜக போக்கு ,விதிமுறை மீறல்கள் நடந்து தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்று தெரியவில்லை. தேர்தல் நிறுத்தப்பட்டால் என்ன நடந்திடப் போகிறது. தேர்தல் ஆணையம் என்று, ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை.இது கருத்துச்சுதந்திரத்தை நெருக்கும் செயல் எனவும் அவர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.