ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் அரசியல் தலையீடு இருக்காது-திரிணமூல் காங்கிரஸ்

அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் பெண்ணுக்கும் தங்களது கட்சிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையில் அரசியல் ரீதியிலான குறுக்கீடு இருக்காது…

அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் பெண்ணுக்கும் தங்களது கட்சிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையில் அரசியல் ரீதியிலான குறுக்கீடு இருக்காது என்றும் திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்தது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் குணால் கோஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குறிப்பிட்ட வரையறைக்குள் இந்த வழக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும். கட்சியின் எந்தவொரு தலைவர் தவறிழைத்தாலும் அதுதொடர்பான விசாரணையில் கட்சி தலையிடாது. சில வழக்குகளை முடிக்க மத்திய விசாரணை அமைப்புகள் பல ஆண்டுகளை எடுத்துக் கொள்கின்றன.

பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த சாரதா சிட் ஃபண்ட் வழக்கு 2014ம் ஆண்டு முதலும், நாரதா டேப் வழக்கு 2016ம் ஆண்டு முதலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்னமும் வழக்கு முடிவுக்கு வரவில்லை என்றார் குணால் கோஷ்.

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர், 2016 முதல் 2021 வரை அம்மாநில உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர். அப்போது, அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, அது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, பரேஷ் அதிகாரி உள்பட பல அமைச்சர்களின் வீடுகளிலும், பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான அர்பிதா முகர்ஜியின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை நடத்தினர்.

இதில், அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து மிகப் பெரிய குவியலாக பணம் கைப்பற்றப்பட்டது. வங்கி அதிகாரிகளின் துணையுடன் இயந்திரங்கள் கொண்டு எண்ணப்பட்டதில் சுமார் ரூ.20 கோடி இருந்தது கண்டறியப்பட்டது.

குணால் கோஷ்

இதையடுத்து, பார்த்தா சாட்டர்ஜி இன்று காலை கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள பங்ஷால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும், தன்னை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் பார்த்தா சாட்டர்ஜி கோரினார். பார்த்தா சாட்டர்ஜியை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி வழக்கை நீர்த்துப் போகச் செய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் பார்த்தா சாட்டர்ஜியை அனுமதிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதேநேரத்தில், அவரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.