மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான எந்த திட்டமும் இல்லை என்று திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை என்று தெரிவித்தார். விவசாயிகளை காக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், அதிக வேலை வாய்ப்பை வழங்கும் விவசாயம், சிறு-குறு தொழிலை பாதுகாக்க எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் பட்ஜெட்டில், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறிய அவர், விவசாயம், பொதுத்துறை நிறுவனங்களை நலிவடையச் செய்வது பாஜக அரசின் கடந்த கால செயல்பாடுகளை காட்டுவதாக விமர்சித்தார்.
மேலும், இந்த அரசின் திட்டங்கள் தனியாரின் நலனுக்கானது என்றும், பணக்காரர்களுக்கு ஆதாரவானது என்றும், ஏழை எளிய மக்களுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று கூறினார்.







