தமிழ்நாட்டில் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல் பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
குழந்தைகளுக்கு லேசான அறிகுறி இருந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு
அனுப்ப வேண்டாம், தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கும் அளவிற்கு
பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை, மேகாலயா சுகாதாரத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இந்த நிகழ்ச்சியில் மேகாலயா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜேகே சர்மா, மேகாலயா தமிழக சுகாதாரத்துறையின் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களுடன் தமிழக சுகாதாரத்துறை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அப்பொழுது, மேகாலயா மாநிலத்தில் சுகாதாரத்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழக அரசின் உதவியோடு செயல்படுத்தப்பட உள்ளது எனவும், இதற்காக மேகாலயா சுகாதாரத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை பயிற்சி, மீயொலி பயிற்சி, மற்றும் உயிர்காக்கும் மயக்கவியல் சிகிச்சை பயிற்சியை தமிழக சுகாதாரத்துறையில் உள்ள அரசு மருத்துவர்கள் மூலம் வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வடமாநிலங்களில் இயற்கை மூலிகை செடிகள் அதிகம்
கிடைக்கின்றது என மத்திய ஆயுஸ் அமைச்சர் தெரிவித்தார். அதனால், மேகாலயாவில்
இருக்கும் மூலிகைகளை கண்டறித்து, தேவையான மூலிகை செடிகளை தமிழகத்தின் இயற்கை மருத்துவத்திற்கு பயன்பாடுகள் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது .இதன் மூலம் தமிழ் நாட்டில் நூற்றுக்கணக்கான மலைகிராமங்கள் உள்ளது, அங்கு லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர். அதனால் அங்கு உள்ள மக்களுக்கு சிகிச்சை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதே போல மேகாலயா மாநிலத்தில் அதிக மலை கிராமங்கள் இருப்பதால் அங்குள்ள மலைவாழ் மக்களுக்காக மதர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனை ஆராய்ந்து அந்த திட்டம் இங்கும் செயல்படுத்த முடியுமா என்று முடிவெடுக்கப்படும் என கூறினார். தமிழகத்தில் பருவமழைக்காங்களில் காய்ச்சல் சதவீதம் அதிகரிப்பது வழக்கம் தான். சாதாரண காலங்களில் 1% பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும், தற்பொழுது ஒன்றரை சதவீதமாக உள்ளது இதனால் மக்கள் அச்சப்படத்தேவையில்லை. இதுவரை 368 பேருக்கு இன்ஃப்ளுயென்சா காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 5வயதுக்கு கீழ் 42 குழந்தைகளுக்கும், 5 வயது முதல் 14வயது வரை உள்ளவர்கள் 65 பேருக்கும், 65வயதுக்கு மேற்பட்டவர்களில் 69 பேருக்கும் இன்ஃப்ளுயென்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 368 பேரில், 264 பேர் தனியார் மருத்துவமனையிலும், 89 பேர் வீடுகளிலும்,
அரசு மருத்துவமனைகளில் 15 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதேபோல லேசான
அறிகுறி இருந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்,
பள்ளியில் ஆசிரியர்களும் கண்காணித்து அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கு
தகவலளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தனது பேரன்,பேத்திக்குமே காய்ச்சல் பாதித்து 3 தினங்கள் சிகிச்சைபெற்று
தற்பொழுது நலமுடன் உள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என அவர் தெரிவித்தார். மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பேசும் பொழுது தங்கள் மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசின் துணை தேவைப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் தமிழக முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் தனது நன்றி என மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜேகே சர்மா நன்றி தெரிவித்தார்.







