பேருந்தில் மகளிருக்கு கட்டணமில்லாப் பயணம் குறித்து நான் விளையாட்டாகப் பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய தேவையில்லை என உயர் கல்வித் துறை அமைச்ர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.
சென்னை கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் உயர் கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் சுற்றில் கலந்துகொள்ள தகுதியுள்ள மாணவர்கள் 31 ஆயிரத்து 94 பேர். அதில் விருப்பப் பாடம் மற்றும் கல்லூரிகளை 23 ஆயிரத்து 458 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கல்லூரிக்கு சென்று சேர வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 153 பேர் என்றும் பொறியியல் சேவை மையங்களுக்கு சென்று சேர வேண்டியவர்கள். 5 ஆயிரத்து 16 மாணவர்கள், மேல்நோக்கி நகர்வுக்காக காத்திருப்பவர்கள். 4 ஆயிரத்து 289 மாணவர்கள் உள்ளனர்.
3-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13ம் தேதி தொடங்கும். பொறியியல் கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெறும். பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும். 8ம் தேதி முதல் கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும். 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் இறுதியில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். நீட் தேர்வு போன்ற காரணங்களால் பொறியியல் கலந்தாய்வு மற்றும் வகுப்புகள் துவங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.
12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க அனைத்து முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். மாநில கல்வி கொள்கை குழு அறிக்கை தாக்கல் செய்ய ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் பொன்முடி.
ஓசி பேருந்து என பேசிய விவகாரம் தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரியது படுத்த வேண்டிய தேவையில்லை என்றார் அமைச்சர் பொன்முடி.








