அதிமுகவிற்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் இல்லை. அதிமுக-பாஜக இடையே பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சம்பிராதயமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினோம். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவையும் சந்தித்தோம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுகவிற்கும், அண்ணாமலைக்கும் எந்த தகராறும் இல்லை. அதிமுக-பாஜக இடையே பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர். அந்தந்த கட்சிகள் அவரவர்களின் கொள்கையின் அடிப்படையில் செயல்படும். ஒற்றுமையாக செயல்பட்டு எங்கள் கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்.
அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எங்களுக்கு முழுமையாக தீர்ப்பு வழங்கிவிட்டது. நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கிவிட்டது. அதிமுக எங்கள் பக்கம் தான் உள்ளது. அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடைபெறவில்லை. டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக சிஏஜி அறிக்கை கூறவில்லை.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் குறித்து அதிர்ச்சியடைந்தேன். நிதி அமைச்சர் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆடியோ விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தியுள்ளோம்.
தொடர்ந்து பேசிய அவர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தது. கொடநாடு வழக்கில் கைதானவர்களுக்கு திமுகவை சேர்ந்தவர்கள் ஜாமீன் எடுத்துக் கொடுத்தனர்.
கடந்த அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்றதாக செல்லும் இடங்களில் மக்கள் கூறுகின்றனர். ஆனால் திமுகவின் இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் கூறுகின்றனர். மேலும், திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார். அது எல்லோருக்கும் தெரியும். துரோகம் செய்தவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை. துரோகம் செய்தவர்களை தவிர்த்து மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்ப்போம் என கூறினார்.