தமிழ்நாட்டில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று 10 பள்ளிகளை சேர்ந்த 1,968 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களின் கல்வி இடைநிற்றல் தடுக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு உதவிகளை தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது என்றார்.
அதில் ஒரு திட்டம்தான் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம். எனவே மாணவர்கள் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளை பயன்படுத்தி உயர்கல்வி பயில வேண்டும். ஆட்சிகள் மாறினாலும் பள்ளி மாணவர்களுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வேளாண்மை செழிக்கும் வகையிலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு அணைக்கட்டு பகுதியில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அணைக்கட்டு பகுதியில் புதிய தொழில் பேட்டை ஒன்றும், அரசு கல்லூரியும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆந்திரா அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். மேட்டூர் உபரி நீ திட்டம், தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் பிற மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்றார். தமிழ்நாட்டில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லை என்றும், அதற்கான இட வசதியோ? நீர்வரத்தோ? இல்லை என்றும் அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்தார்.
– இரா.நம்பிராஜன்







