அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள கோவிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு மட்டும் என எப்படி உரிமை கொண்டாட முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஆலங்குளம் பஞ்சாயத்து, கண்மாய் பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோவில், விநாயகர் கோவில் என 2 கோயில்கள் உள்ளன. இரு கோவில்களும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது. பல சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வழிபட்டு வந்த நிலையில், கடந்த 2009-ஆம் ஆண்டு கோவில் திருவிழாவின் போது, இரண்டு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதைத் தொடர்ந்து நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், விநாயகர் கோவிலின் திருவிழாவை ஒரு சமூகத்தினரும், மந்தையம்மன் திருவிழாவை மற்றும் சமூகத்தினரும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அவை தவிரப் பிற நாட்களில் இரண்டு கோவில்களிலும் அனைத்து சமூகத்தினரும் சென்று வழிபடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், விநாயகர் கோவிலைக் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது கோவில் என உரிமை கொண்டாடுவதோடு, அவர்களது சமூகத் தலைவரின் சிலையையும் கோவிலில் வைத்துள்ளனர். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கோவிலுக்குள் நுழைய விடாமல், கோவிலைப் பூட்டி வைக்கும் சூழலும் உள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே ஆலங்குளம் பஞ்சாயத்து, கண்மாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள இரு கோவில்களிலும் அனைத்து சமூகத்தினரும் சென்று வழிபட உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
அண்மைச் செய்தி: ‘உதயமானது நியூஸ் 7 தமிழ் ஹெல்த் யூட்யூப் சேனல்’
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, “அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள கோவிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு மட்டும் என எப்படி உரிமை கொண்டாட முடியும்? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், அரசியலமைப்பு வழங்கும் வழிபாட்டு உரிமையை முறையாக மதித்து நடப்பதன் காரணமாகவே இன்றும் பல சமயங்கள் நடைமுறையில் உள்ளன எனக் கருத்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, உலகம் பலவற்றையும் நோக்கி வளர்ச்சியடைந்து வரும் அதே சமயம், கோவிலுக்குள் மற்றொரு சமூகத்தினர் நுழையக்கூடாது என்று இருக்கும் சூழலும் நிலவுவதாக வேதனையைத் தெரிவித்து, வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.