கையும்களவுமாக சிக்கிய திருடன்: மரத்தில் கட்டிவைத்து விடியவிடிய காவல் காத்த கிராம மக்கள்

நாகை அருகே வீட்டில் திருடச் சென்றபோது கையும் களவுமாக சிக்கிய அரை டவுசர் திருடனை மரத்தில் கட்டிவைத்து  கிராம மக்கள் விடிய விடிய காவல் காத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டிணம் மாவட்டம், வேளாங்கண்ணியை…

நாகை அருகே வீட்டில் திருடச் சென்றபோது கையும் களவுமாக சிக்கிய அரை டவுசர்
திருடனை மரத்தில் கட்டிவைத்து  கிராம மக்கள் விடிய விடிய காவல் காத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டிணம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர்
தெற்குதெரு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவரது வீட்டிற்கு நேற்று
இரவு சுமார் 10 மணியளவில் மர்மநபர்  ஒருவர் சென்றுள்ளார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவனை நோட்டம் விட்டபடியே பின்
தொடர்ந்துள்ளனர். இதனைக் கண்டு சுதாரித்துக்கொண்ட அந்த நபர் அங்கிருந்து
உடனடியாக ஓட்டம் பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

சுமார் 300 மீட்டர் தூரம் ஆங்காங்கே விழுந்து விழுந்து ஓடிய திருடனை மடக்கிப் பிடித்த கிராம மக்கள் அங்குள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவனிடம் சரமாரியாக அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளனர். இதில், அரை டவுசர் போட்டிருந்த அந்த நபர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராஜ் என்பதும், ஏற்கனவே அதே பகுதியில் காணாமல் போன கணேசன் என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தை தான் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி போலீஸாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் இரவு நேரங்களில் கைதிகளை காவல் நிலையத்தில்
வைத்திருக்கக் கூடாது என்ற உத்தரவினால், கிராம மக்களே திருடனை விடிய விடிய காவல் காத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.