படத்தில் முக்கிய கதாபாத்திரம் தருவதாக கூறி 2.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த தயாரிப்பாளர் மீது “விக்ரம்” பட நடிகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள
மாமன்னன் மற்றும் பல சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர் ராஜகுமார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று பெண் தயாரிப்பாளர் மீது மோசடி புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜகுமார், திரைப்படம் மற்றும் சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருவதாகவும் கடந்த ஓராண்டிற்கு முன்பு சாலிகிராமத்தை சேர்ந்த பெண் தயாரிப்பாளரான பத்மபிரியா என்பவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் பத்மபிரியா, தான் திரைப்படம் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும், அந்த
படத்தில் பெரிய கதாபாத்திரம் தருவதாக தன்னிடம் ஆசை வார்த்தை கூறி, அவரது ஸ்டூடியோவில் தன்னை தங்க வைத்து ஏமாற்றி சிறுக சிறுக 50 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் தன்னுடைய காரின் ஆர்சி புத்தகத்தை வாங்கி தனியார் ஃபைனான்ஸ் கம்பெனியில் அடமானம் வைத்து ரூ.2.11 லட்சம் பணத்தை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறினார். பத்மபிரியா, கார் கடனுக்கான தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதால் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் தனது காரை எடுத்துச் சென்று விட்டனர். காரில் தன்னுடைய வீட்டு சாவி, ஏடிஎம் கார்டு, துணி உள்ளிட்ட முக்கிய பொருட்கள் உள்ளது. எனவே கார் திரும்ப கிடைத்தால் மட்டுமே என்னுடைய பொருட்கள் திரும்ப கிடைக்கும். இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது போலீசார் என்னுடைய புகாரை வாங்காமல் அலைக்கழித்தனர். இதனால்தான் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தேன் என்று தெரிவித்தார்.
மேலும் காவல் ஆணையர் அலுவலகத்தில் எனது புகாரைப் பெற்று, உடனே பத்மபிரியா செல்போன் எண்ணை டிராக் செய்து, அவர் கேரளாவில் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார். தான் இழந்த பணத்தை விரைவில் மீட்டுத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.







