அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபையை அறிவித்ததை இந்தியா வரவேற்றுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஹபீஸ் சயீதின் உறவினர் ஆவார்.
லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தாவா போன்ற பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனாக இருந்த ரஹ்மான் மக்கியை தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்திருந்தது. அப்துல் மக்கி பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பது, நிதி திரட்டுவது, இளைஞர்களை மூளைச் சலவை செய்ததுடன், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக திகழ்ந்தார்.
இவரை சர்வதேச பயங்கரவாத அமைப்பின் தலைவராக இந்தியா மற்றும் அமெரிக்கா கடந்த ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இதற்கு சீனா தடையாக இருந்து வந்தது. சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், அப்துல் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு தெரிவித்த தடையை சீனா விலக்கியுள்ளது. இதையடுத்து அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவித்தது. ஐ.நா.சபையில் இந்த முடிவை இந்தியா வரவேற்பதாக தெரிவித்துள்ளது.







