மன்னிப்பு கடிதத்துடன் திருடிய பணத்தை திருப்பி வைத்த திருடன்!!

கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபர் மனந்திருந்தி மன்னிப்பு கடிதத்துடன் திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் போட்டு சென்ற ருசீகர சம்பவம் அரங்கேறி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே புகழ்பெற்ற காஞ்சனகிரிமலையில் ஈஸ்வரன்…

கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபர் மனந்திருந்தி மன்னிப்பு கடிதத்துடன் திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் போட்டு சென்ற ருசீகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே புகழ்பெற்ற காஞ்சனகிரிமலையில்
ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி
விழா சிறப்பாக நடைபெற்றது. இக்கோயில் வளாகத்தில் 1008 சுயம்பு லிங்கங்கள்
உள்ளது. சித்ராபௌர்ணமி நடைபெற்ற சில தினங்களுக்குள், இங்கு வைக்கப்பட்டிருந்த
உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடுபோனது. இதுகுறித்து கோவில்
நிர்வாகத்தினர் சிப்காட் போலீசில் புகார் செய்திருந்தனர். இதுகுறித்து
போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று கோவில் நிர்வாகத்தினர் 1008 சுயம்பு லிங்கங்கள் முன்பு
வைத்திருந்த உண்டியலை திறந்து அதிலிருந்த பணத்தை எடுத்தனர். அப்போது
உண்டியலில் பக்தர்கள் செலுத்திய பணத்துடன், மேலும் ஒரு கடிதமும் அதனுள்ளே 500
ரூபாய் நோட்டுகள் 20 (ரூ.10,000) இருந்தது. அந்த சீட்டை பிரித்துப் பார்த்தபோது
அதில், என்னை மன்னித்து விடுங்கள். சித்ரா பௌர்ணமிக்கு பிறகு நான் தான்
கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டேன். அப்போது இருந்து
எனக்கு மனசு சரியில்லை. நிம்மதியில்லை. அப்புறம் வீட்டில் நிறைய பிரச்சினை
வருகிறது. எனவே நான் மனம் திருந்தி எடுத்த பணத்தை அதே உண்டியலில் ( ரூ10,000 )
போட்டு விடுகிறேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். கடவுளும் என்னை
மன்னிப்பாரா தெரியாது. வணக்கம் என்றிருந்தது.

இதனையடுத்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்த கோயில் நிர்வாகத்தினர் இந்த
கடிதத்தை சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். கோவில் உண்டியலை உடைத்து பணம்
திருடியவர் மனம் திருந்தி மீண்டும் பணத்தை உண்டியலில் மன்னிப்பு கடிதத்துடன்
செலுத்தியது பரபரப்பையும், இறை பக்தியின் பெருமையை உணரச் செய்வதாகவும்
இருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.