சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு நடைபெறவிருக்கும் இந்த மிக முக்கியக் கூட்டத்தில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, புதிய திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை (Budget Session) குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட வேண்டிய நிதி, புதிய வரிவிதிப்புகள் அல்லது சலுகைகள் மற்றும் தவெக அரசின் நிதியாண்டிற்கான முக்கியப் பொருளாதார இலக்குகள் குறித்து இதில் இறுதி முடிவு எடுக்கப்படும். பட்ஜெட்டில் தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




