சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மீது சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடல் மார்க்கமாக வரும் சரக்குகளை இறக்குமதி செய்பவர்களுக்கு ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இதுதொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ஜிஎஸ்டி விவகாரங்களில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் சட்டங்கள் இயற்றும் அதிகாரம் உள்ளது. கூட்டாட்சி அமைப்பில் ஒன்றுக்கு மட்டும் அதிக அதிகாரம் இருக்கக் கூடாது.
ஜிஎஸ்டி கவுன்சிலும் இதனை சாத்தியமாக்குவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.





