28.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநில பாடலானது தமிழ்த்தாய் வாழ்த்து-அரசாணை வெளியீடு

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடல் பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய நீராரும் கடலுடுத்த எனும் பாடல் பாடப்பட வேண்டும் எனம் கோரிக்கை 1913ஆம் ஆண்டைய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம் பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக 1914ஆம் ஆண்டு முதல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடி வந்துள்ளார்கள். மேலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்ச் சங்கமாகக் கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உருவான தமிழ்ச் சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டது.

இதனை தமிழக அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களுக்ககு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கையாக எழுதி அனுப்பியும் வைத்தார்கள். தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்யைினை ஏற்று 1970ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 11ஆம் தேதியன்று நடந்த அரசு விழாவில் அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் பேசும்போது இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும்.

நீராருங் கடலுடுத்த எனும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அமையும் என்று அறிவித்தார்கள்.

அதன்படியே 1891ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் “தமிழ்த் தெய்வ வணக்கம்” எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயைப் போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 23 நவம்பர் 1970ஆம் ஆண்டு அன்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. அரசாணையும் வெளியிட்டது.

அவ்வரசாணையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்கென சில வழிக்காட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்பாடலை இசை வட்டுக்களை கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்கள் நிகழ்ச்சிகளில் பாடவேண்டும் எனவும் சமீபத்தில் ஆணையிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்.” என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் மியூசிக் அகாடமியில் 24.01.2018-ல் நடைபெற்ற தமிழ்- சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததாக கூறப்பட்டது.

இது குறித்த வழக்கு ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்க பாடல். தேசிய கீதம் அல்ல. தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவு இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சமீபத்தில் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading