சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சிக்கள்ளி வனச்சாலையில் குட்டிகளுடன்
வாகனங்களை வழிமறைத்த யானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலையை வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி அருகே யானைகள் கூட்டமாக குட்டிகளுடன் வனச்சாலையை வழிமறித்து நின்றது.
இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை சற்று தூரத்தில் நிறுத்தி கொண்டனர். பின்னர் தங்களது செல் போன் மூலம் அதை வீடியோ எடுத்தனர். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக குட்டிகளுடன் உலா வந்த யானைகள் பின்னர் வனப்பகுதியினுள் சென்றது. இந்த காட்சிகள் சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.
வனவிலங்குகள் உணவு, தண்ணீருக்காக சாலையை கடந்து செல்கிறது. எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும், வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் செல்லுமாறு வனத்துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.







