சென்னையில் குட்கா பதுக்கல்-62 பேரை கைது செய்தது காவல் துறை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், பள்ளி மற்றும் கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்கள் அருகில் மற்றும் இதர இடங்களில் குட்கா வைத்திருந்தது தொடர்பாக 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 62 நபர்கள் கைது.…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், பள்ளி மற்றும் கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்கள் அருகில் மற்றும் இதர இடங்களில் குட்கா வைத்திருந்தது தொடர்பாக 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 62 நபர்கள் கைது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கவும். இளைய சமுதாயத்தினர் இப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுக்கவும், இவற்றை கடத்தி வருபவரக்ள் மற்றும் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யவும், “புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை” (DABToP -Drive Against Banned Tobacco Products) என்ற சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர், குட்கா-புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர இடங்களில் ஒரு நாள் சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (19.07.2022) குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையில், பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தொடர்பாக, 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 நபர்கள் கைது செய்யப்பட்டு. 1 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 1.187 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டும், இதர இடங்களில் குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 44 நபர்கள் கைது செய்யப்பட்டு, 9 கிலோ குட்கா பாக்கெட்டுகள், 220 சிகரெட்டுகள்  பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினரால் ஏற்கனவே, பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்கள் மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க 5 முறை சிறப்பு தணிக்கைகள் மேற்கொண்டு, 359 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 362 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 268.7 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 8,170 சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும் இதர இடங்களிலும் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் போதை வஸ்துக்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய வாகனத் தணிக்கைகள், தீவிர ரோந்து பணிகள் மற்றும் சிறப்பு அதிரடி தணிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.