கருமுட்டை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குண்டர் தடுப்பு
சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு சூரம்பட்டி காவல் துறையினர் சிறுமியின் தாயார் சுமையா என்கின்ற இந்திராணி , சிறுமியின் வளர்ப்பு தந்தை சையத்அலி , இடைத்தரகர்ளாக செயல்பட்ட மாலதி மற்றும் ஆதார் கார்டை திருத்தி கொடுத்த ஜான் உள்ளிட்ட நான்கு பேரை போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர்.
இதனிடையே தமிழக அரசு சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. குழுவினரும் சிறுமி மற்றும் கருமுட்டை பெற்றதாக புகார் எழுந்த மருத்துவமனைகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் மருத்துவமனைக்கு சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனிடையே கருமுட்டை விவரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண்ணுண்ணி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையிலுள்ள 4 பேரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தின் அடைப்பதற்கான கடிதத்தை வழங்கினர்.







