ஈரோடு மாவட்டம் பவானி அருகே அந்தியூர் எம்எல்ஏ சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த திமுக எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம். இவர் தமிழக அரசின் மாற்றுத்திறனாளி நல வாரிய தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சட்டமன்றத் உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி பங்கேற்க ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லுவதற்காக அந்தியூரிலிருந்து பவானி வழியாக ஈரோட்டிற்கு காரில் தனது உதவியாளருடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பவானி அருகே வாய்க்கால் பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கனமழை பெய்து கொண்டிருந்தது. இந்த கனமழை காரணமாக கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியினர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் கை முறிவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சட்டமன்றத் உறுப்பினர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.







