சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்தும் 2 நாள் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் 3-ம் நிலை நகரங்கள் கூட வளர்ச்சி அடைந்துள்ளன. சமூகநீதி – சமத்துவம் – மக்கள் நலன் ஆகியவற்றை திமுக அரசு முக்கியமாக பார்க்கிறது.
சமூகத்தில் எந்த பிரிவினரும் விடுபட்டு விடக்கூடாது என பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இந்தியாவில் எந்த மாநிலமும் அடைய முடியாத 11.8% வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது. இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும். நாட்டிலேயே முதல்முறையாக காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்தி வருகிறது. திமுக ஆட்சியில் 4,000 கோவில்களில் குடமுழுக்கு செய்துள்ளோம். இது பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத சாதனை. நாட்டுக்கே வழிகாட்டி திராவிட மாடல் ஆட்சி என்பதற்கான அடையாளம் மற்ற மாநிலங்களில் நம் திட்டங்களை பின்பற்றுவதுதான்.
திமுகவின் மீது வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதாவது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? பாஜகவின் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் தான். இந்தி திணிப்பை ஏற்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதி எப்போது வரும்? களத்தில் எங்களை எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு தான் வாரிசு அரசியல். கட்டாயத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது. அது துரோகக்கூட்டணி என்று விமர்சனம் செய்துள்ளார்.







