சினிமா பானியில் இருசக்கர வாகனத்தைத் திருடிய சம்பவம் கோவை மாவட்டத்தில் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் சுந்தர் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனம் ஒன்றை விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தின் படத்தையும் தொலைப்பேசி எண்ணையும் ஓஎல்எக்ஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனைப் பார்த்த ஒருவர் சூலூர் பள்ள பாளையம் பகுதியிலுள்ள தனியார் மில்லுக்கு அருகில் வருமாறும் தான் அந்த பைக்கை வாங்கிக் கொள்வதாகும் தொலைப்பேசியில் அழைத்துக் கூறியிருக்கிறார். இதனை நம்பி வினோத் சுந்தரம் அவரது நண்பரும் அப்பகுதிக்கு வந்துள்ளனர். பிறகு அந்த நபருக்கு போன் செய்துள்ளனர் அப்போது அந்த நபர் தான் மில்லில் வேலை செய்து வருவதாகவும் சிறிது நேரம் காத்திருக்கும் மாறும் கூறியுள்ளார்.
பின்னர் வெளியே வந்த நபர் வண்டியின் ஆர்சி புக்கை பெற்றுக்கொண்டு வண்டியை ஓட்டி பார்ப்பதாகக் கூறி வண்டியை ஓட்டி சென்று உள்ளார். நீண்ட நேரமாகியும் அந்த நபர் வராத காரணத்தினால் வினோத் சுந்தர் அவரது நண்பரும் மில்லுக்குள் சென்று அந்த நபர் குறித்து விசாரித்துள்ளனர். அந்த நபர் வேலைக்கு வந்து ஒரு நாள்தான் ஆகி இருப்பதாகவும் அவரைப் பற்றி விவரங்கள் தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வினோத் சுந்தர் உடனடியாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைப் பெற்றுக்கொண்டு சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.








