பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த வழக்கில் இன்று நேரில் ஆஜரான நடிகை மீரா மிதுன், தான் அவ்வாறு பேசவில்லை என நீதிபதி முன்பு விளக்கமளித்துள்ளார்.
பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து பின்னர் விசாரணைக்கு முறையாக மீரா மிதுன் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோதும் மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீராமிதுன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது பட்டியலினத்தவர்கள் குறித்து தான் தவறாக பேசவில்லை என நீதிபதி அல்லி முன்பு மீரா மிதுன் தெரிவித்துள்ளார். இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஏற்க மறுத்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கை எதிர்கொள்வதாக தெரிவித்ததால், சாட்சி விசாரணைக்காக ஜீலை 10-ம் தேதி வழக்கை தள்ளி வைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
– இரா.நம்பிராஜன்








