இந்த ஆண்டு இந்தியா 7.5 சதவீதம் என்கிற பொருளாதார வளர்ச்சியை அடையும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன் மூலம் உலகின் பெரும் பொருளாதாரங்களில் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரத்தை கொண்ட நாடு என்கிற பெருமையை இந்தியா அடையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மாநாட்டின் தொடக்கவிழாவில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். புதிய இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா பாதிப்புகளுக்கு பின் ஏற்பட்ட பொருளாதார சவால்களை சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்கிற மந்திரத்தை பயன்படுத்தி இந்தியா சமாளித்து வருவதாக அவர் கூறினார். இந்த மந்திரத்தின் சிறப்பை இந்திய பொருளாதாரம் சிறந்து விளங்குவதிலிருந்தே நாம் உணர்ந்துகொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொழில்நுட்பங்களின் மூலம் வழிநடத்தப்படும் வளர்ச்சி, தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை எளிமைபடுத்துதல், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் பரிமாற்றம் ஆகிய 4 தூண்கள் இந்திய பொருளாதாரம் மீண்டு எழுந்ததற்கு முக்கிய காரணம் என்றும் பிரதமர் மோடி பிரிக்ஸ் வர்த்தக மாநாடு தொடக்க விழாவில் கூறினார். இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றத்தின் மதிப்பு வரும் 2025ம் ஆண்டிற்குள் சுமார் 78 லட்சம் கோடி ரூபாயை அடையும் என்றும் இந்த நிகழ்வில் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
n.