முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் திராவிட மாடல் வளர்ச்சி என்ன என்பதை விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு…
ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே திட்டங்களை செயல்படுத்துவதில் அதிரடி காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சட்டமன்றத் தேர்தல் வெற்றியை அடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் “நாங்கள் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள்” என
பொருள்படும்படி, “Belongs to the Dravidian stock” என பதிவிட்ட மு.க.ஸ்டாலின், புதிய
அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்புக்கும் அச்சாரம் போட்டு வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் தொடர்ச்சியாகவே, ஒன்றிய அரசு என்ற வார்த்தை பிரயோகத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்புத்தக்கத்தில் உள்ளதையே
பின்பற்றுவதாகவும், இனியும் அவ்வாறே அழைக்கப்படும் என்றும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் தான், முதலமைச்சரின் “திராவிட மாடல்” என்ற வார்த்தை பிரயோகம், அரசியல் அரங்கில் பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. சம வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும் என்று, ஜெயரஞ்சனை துணைத் தலைவராக
கொண்ட மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவினரிடம் அறிவுறுத்தியிருந்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதையே சர்வதேச பொருளாதார ஆலோசகர்களை
கொண்ட ஆலோசனைக் குழுவிலும் அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒரு முறை பதிவு
செய்திருக்கிறார்.
கடந்த காலங்களில் குஜராத் மாடல் போன்ற, பல்வேறு மாடல்கள் பெரியளவில் பேசப்பட்டாலும், தனிமனித வருவாயை பெருக்கியதிலும், சுகாதார கட்டமைப்பிலும், தமிழ்நாடு மேம்பட்ட மாநிலம் என்பதை, அண்மையில் வெளியான ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வு முடிவுகள் அறுதியிட்டு கூறின. உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையிலும் தேசிய சராசரியை விட அதிகம் பெற்று, பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாகவே திகழ்கிறது தமிழ்நாடு.
எனினும், கொரோனா நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சீர்செய்து, தமிழ்நாட்டை மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செலுத்த, பொருளாதார ஆலோசகர்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் முதலமைச்சர். நோபல் பரிசுப்பெற்ற எஸ்தர் டஃபோலோ, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், ஜீன் டிரீஸ், எஸ். நாராயணன் உள்ளிட்டோரிடம், திராவிட மாடல் அடிப்படையில் வளர்ச்சி இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.