டெல்லியில் நேற்று முன்தினம் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு ரயில் மூலம் இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டார்.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேசன் பாபு, பெண் காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஒரு வார காலம் ஒத்தி வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2024 : குஜராத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று பலப்பரீட்சை!
பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில், பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, டெல்லியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை, திருச்சியிலிருந்து சென்ற தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இந்நிலையில், கோவை போலீசார் அவருக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில் ரயில் மூலம் ரெட்பிக்ஸ் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு சென்னை அழைத்து வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அவரை திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.









