சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட வழக்கில் கைதான இடைத்தரகரிடம் மேற்கொண்ட விசாரணையில், தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலத்திற்கும் சிறுமியை அழைத்து சென்று கருமுட்டை எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பாக சிறுமியின் தாயார் சுமையா, தாயாரின் இரண்டாவது கணவர் சையத் அலி, இடைத்தரகர் மாலதி மற்றும் ஆதார் கார்டு திருத்தம் செய்து கொடுத்த ஜான் உள்ளிட்ட 4 பேரை ஈரோடு தெற்கு காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்தனர்.
மேலும் கருமுட்டை பெற்ற விவகாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், இடைத்தரகராக செயல்பட்ட மாலதியின் வங்கிக்கணக்கில் பல்வேறு தேதிகளில் பணம் வரவு வைக்கப்பட்டு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
சம்பந்தப்பட்ட சிறுமி இடைத்தரகர் மூலமாக ஈரோடு ,பெருந்துறை, சேலம், ஓசூர் போன்ற நகரங்களுக்கும், திருவனந்தபுரம், திருப்பதி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு எட்டு முறை தலா ரூ.20 ஆயிரம் தொகைக்கு கருமுட்டை விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதேபோல சிறுமியிடம் மட்டுமின்றி பல்வேறு பெண்களை கருமுட்டை விற்பனைக்கு அழைத்து சென்றதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த இடைத்தரகர் மூலம் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.








