வரதட்சணை கொடுமை, 3 சகோதரிகள் உயிரிழப்பு

வரதட்சணை கொடுமையின் காரணமாக 3 சகோதரிகள் குழந்தைகளுடன் ஒரே நேரத்தில் தஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த சாப்பியா கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் கலு மீனா(25), மம்தா…

வரதட்சணை கொடுமையின் காரணமாக 3 சகோதரிகள் குழந்தைகளுடன் ஒரே நேரத்தில் தஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த சாப்பியா கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் கலு மீனா(25), மம்தா (23) மற்றும் கம்லேஷ் (20). இவர்கள் மூவரும் அதே ஊரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களை திருமணம் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்று பேரும் தங்களது 4 வயது மகன் மற்றும் 27 நாட்களேயான கைக்குழந்தையுடன் மாயமாகியுள்ளனர். இதனையடுத்து அவர்களது கணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். 4 நாட்கள் கடுமையான தேடுதலுக்குப் பின்பு சகோதரிகள் மற்றும் 2 குழந்தைகளின் சடலங்கள் அதே கிராமத்திலுள்ள ஒரு கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

திருமணமான நாளிலிருந்தே புகுந்த வீட்டில், சகோதரிகள் மூவரிடமும் வரதட்சணை கேட்டு அடித்தும் துன்புறுத்தியும் சித்திரவதைச் செய்ததாக இறந்துபோன சகோதரிகளின் உறவினர் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் இறந்துபோன சகோதரிகளில் இளையவரான கம்லேஷ் தனது வாட்ஸப் ஸ்டேட்டஸில், “நாங்கள் செல்கிறோம். அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள். எங்கள் சாவுக்கு எங்களது புகுந்த வீட்டில் உள்ளவர்கள்தான் காரணம். தினம் தினம் கொடுமை அனுபவித்து சாவதற்கு ஒரே நாளில் இறந்துபோவதே மேல். அடுத்த ஜென்மத்திலாவது நாங்கள் மூவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழவேண்டும் என்று விரும்புகிறேன். எங்கள் சாவிற்கும் எங்கள் பெற்றோருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” எனப் பதிவிட்டிருந்தார்.

இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார், விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாமியார், மூவரின் கணவர்கள் மற்றும் இச்சம்பவத்திற்குத் தொடர்புடைய உறவினர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் மிக வருத்தமளிக்கும் ஒன்று என்னவென்றால் இறந்து போன சகோதரிகளில் இருவர் கர்ப்பமாக இருந்துள்ளனர். இச்சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.