குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தும் சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல்துறையினர் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவன் மஞ்சள் கயிற்றைக் கட்டும் காட்சிகள், சமூக வலைத்தளத்தில் பரவியது. மாணவனுக்கு எதிராகச் சிதம்பரம் நகர காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது.
இதையடுத்து மாணவியை மீட்கக் கோரி மாணவியின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவியைப் பெற்றோரிடம் ஒப்படைக்கவும், மாணவனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து அறிக்கை அளிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஜி.சந்திரசேகர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, சமூக வலைத்தளங்கள் மூலம் உருவாகும் அழுத்தம் காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் ஆட்சியரும், எஸ்.பி.யும் இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதாகவும், இருவரையும் கைது செய்ததன் மூலம் நீங்கள் என்ன சாதித்துவிட்டீர்கள் என. கேள்வி எழுப்பினர்.
சட்டங்கள் மற்றும் உத்தரவுகள் எல்லாம் தெளிவாக உள்ளதாகவும் அதனை அமல் படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சந்துரு விளக்கம் அளித்தார்.
இது போன்ற கைது நடவடிக்கைகளுக்கு உயர் அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கையாள்வது குறித்து காவல்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம், நீதிமன்றத்திற்கு உதவநியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோர் இணைந்து ஆலோசனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.







