மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மின் கட்டணம் செலுத்த முடியாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கே.பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் அவர்களது வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கே.பாலகிருஷ்ணன், உரிய நேரத்தில் மின் கட்டணம் செலுத்தாமல் அபராத கட்டணத்துடன் மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மின் கட்டண உயர்வால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள கே.பாலகிருஷ்ணன், எனவே மின் கட்டணம் செலுத்த ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்கிற அறிவிப்பை உடனடியாக மின்சார வாரியம் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.