நான்காம் முறை விசாரணைக்கு வந்துள்ளேன்; விரக்தியில் நடிகர் சூரி

முதல்முறை வந்தேன் விசாரணை நடந்தது, இரண்டாம் முறை வந்தேன் விசாரணை நடந்தது.  மூன்றாம் முறை வந்தேன் விசாரணை நடந்தது; தற்போது நான்காம் முறை வந்தேன் விசாரணை முடிந்து செல்வதாக விரக்தியோடு நடிகர் சூரி கூறினார்.…

முதல்முறை வந்தேன் விசாரணை நடந்தது, இரண்டாம் முறை வந்தேன் விசாரணை நடந்தது.  மூன்றாம் முறை வந்தேன் விசாரணை நடந்தது; தற்போது நான்காம் முறை வந்தேன் விசாரணை முடிந்து செல்வதாக விரக்தியோடு நடிகர் சூரி கூறினார்.

திரைப்பட காமெடி நடிகரான சூரி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாகக் கடந்த மார்ச் மாதம் அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 வேதகாலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டது. இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுவரை நடிகர் சூரி மூன்று முறைக்கும் மேல் இவ்வழக்கு தொடர்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகி பதிலளித்துள்ள நிலையில், இன்றும் நடிகர் சூரி மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற விசாரணைக்குப் பின் வெளியே வந்த சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முதல் முறை வந்தேன் விசாரணை நடந்தது, மீண்டும் வந்தேன் விசாரணை நடந்தது, மீண்டும் வந்தேன் விசாரணை நடந்தது, இன்றும் வந்தேன் விசாரணை நடந்தது என தனது விரக்தியான மனநிலையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், முன்பெல்லாம் வீட்டைவிட்டு வெளியே சென்று வந்தால் ஷூட்டிங் சென்று வருகிறீர்களா எனக் கேட்பவர்கள், இப்போதெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் சென்று வருகிறீர்களா எனக் கேட்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும், விசாரணை திருப்திகரமாக உள்ளது என தான் நம்புவதாகவும், தனக்குச் சாதகமாக முடியவேண்டும் எனக் கருதவில்லை எனவும் கூறிய அவர், நியாயம் எதுவோ அது கிடைக்க வேண்டும் என மட்டுமே தான் நினைப்பதாகவும் கூறினார். மேலும், எதிர் மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தினார்களா என்பது பற்றி தனக்குத் தெரியவில்லை என்ற அவர், தனக்கு காவல்துறை மீதும், நீதிமன்ற மீதும், கடவுள் மீதும் நம்பிக்கை உள்ளது எனவும், தனக்கான நியாயம் கிடைக்கும் என நினைப்பதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.