அரசு பள்ளியில் பயின்று IIT நுழைவுத் தேர்வில் வென்ற மாணவன் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்சி துவரங்குறிச்சியை அடுத்த கரடிப்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவன் அருண் குமார். இவர் அருகில் உள்ள சேவல்பட்டி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களில் கல்வி பயில பயிற்சி கொடுத்துள்ளனர். வார இறுதி நாட்களில் தொடர்ச்சியாக இந்த பயிற்சியில் பங்கேற்ற மாணவன் அருண் குமார் சமீபத்தில் ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று 17,061வது இடமும் ஜேஇஇ மெயின் தேர்விலும் தேர்ச்சி பெற்று 12,175வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இதன் மூலம் அவருக்கு ஐஐடியில் பயிலுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் பொருளாதார சூழல் காரணமாக இந்த படிப்பை தொடர முடியுமா என்கிற கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில், மாணவன் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் அருண்குமாரின் மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என உறுதியளித்துள்ளார்.









