தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றுள்ளதால், அதனை மேலும் ஊக்கப்படுத்திடும் வகையில், தமிழ்நாடு யானைகள் முகாமில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அனைவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. வண்ணமயமான அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு, அப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் ஆஸ்கர் விருதினை பெற்றனர். ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் ஆஸ்கார் விருது வென்றதை இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனரை இன்று சென்னை, தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுப் பத்திரமும், பொன்னாடையும் அணிவித்து தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது என்பதால், அதனை மேலும் ஊக்கப்படுத்திடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் பணியாற்றி வரும் மொத்தம் உள்ள 91 பணியாளர்களுக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்.
இதுதவிர ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூபாய் 8 கோடி செலவில் அமைக்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2022-ஆம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் “அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்” ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா