திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு பட்ஜெட் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றன. காலை 10 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் வாசிப்பு 1.50 மணிநேரம் வரை நீண்டது. இந்த பட்ஜெட்டுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் குறித்த தனது கருத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், “இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’இது அமைந்திருக்கிறது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ரூ.1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஆனால் இது ‘பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.