தாட்கோ பரிந்துரை செய்து ஓராண்டாகியும் கடன் வழங்காத வங்கி -விவசாயி வேதனை!

உசிலம்பட்டி அருகே விவசாய கூலி தொழிலாளிக்கு கடன் கொடுக்க தாட்கோ பரிந்துரை செய்தும் வங்கி அலைக்கழிப்பதாக விவசாயி குற்றம்சாட்டியுள்ளார்.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலித் தொழிலாளி அப்பாஸ்.…

உசிலம்பட்டி அருகே விவசாய கூலி தொழிலாளிக்கு கடன் கொடுக்க தாட்கோ பரிந்துரை செய்தும் வங்கி அலைக்கழிப்பதாக விவசாயி குற்றம்சாட்டியுள்ளார். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலித் தொழிலாளி அப்பாஸ். இவர் பசுமாடுகளை வளர்க்க, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோவில் கடன் பெறுவதற்காகக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணப்பித்திருந்த நிலையில், உரிய விசாரணை மற்றும் நேர்காணல் நடத்தி இவருக்கு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கடன் வழங்கலாம் என சம்பந்தப்பட்ட வங்கியான சின்னக்கட்டளை பேங்க் ஆப் இந்தியாவிற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி பரிந்துரை வழங்கியது தாட்கோ. 

இந்த பரிந்துரை வழங்கி ஓராண்டு ஆகியும், சம்பந்தப்பட்ட விவசாயக் கூலி தொழிலாளி
அப்பாஸ் வசிக்கும் பெருங்காமநல்லூர், காளப்பன்பட்டியில் வங்கி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருப்பதால் தங்களுக்கும் கடன் வழங்க மாட்டோம் என வங்கி மேலாளர் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

இந்த கூலி தொழிலாளி மீது வேறு எந்த கடனும் இல்லாத சூழலில், தனக்கு தாட்கோ மூலம் வழங்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் வங்கியில் கடன் வழங்க கோரிய போது,
பல்வேறு காரணங்களை கூறி வங்கி மேலாளர் கடன் தர மறுத்து ஓர் ஆண்டாக அலைக்கழிப்பு செய்து வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். 

மேலும் இது தொடர்பாக வங்கி மேலாளர் மீது நடவடிக்கை கோரி அப்பாஸ் நேற்று
மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.  
மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.