ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று முதன் முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்து, தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு முதல் நாளே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவான ஈவிகேஎஸ் இளங்கோவன், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 15-ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நலம் பெறுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து மருத்துவமனையில் கொரோனா தொற்று மற்றும் இதய பாதிப்பிற்காக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து 15 நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அனைத்து பிரச்னைகளிலும் இருந்து முழுமையாக குணம் பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த 6-ஆம் தேதி வீடு திரும்பினார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகை தந்தார். உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறிது நேரம் அங்கிருந்த அவர், அவை நிகழ்வுகளில் பங்கேற்காமல், வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டு பின்னர் அங்கிருந்து கிளம்பி வீடு திரும்பினார்.
- பி.ஜேம்ஸ் லிசா









